வயலூர் முருகன் கோயில், திருச்சி

முகவரி :
வயலூர் முருகன் கோயில்,
வயலூர், திருச்சி மாவட்டம் – 620021.
இறைவன்:
ஆதிநாதர் / மறப்பிலி நாதர் / அக்னீஸ்வரன்
இறைவி:
ஆதிநாயகி
அறிமுகம்:
வயலூர் முருகன் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் குமார வயலூர் என்ற ஊரில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சிவன், பார்வதி மகனான முருகப் பெருமானுக்கான ஒரு கோயிலாகும். ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் இந்த கோயில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் இக்கோயில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. கருவறையின் முதன்மை தெய்வம் சிவன் என்றாலும், இக்கோயில் முருகன் கோயிலாக புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் கௌமார வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக முருகப் பெருமானின் அடியாரான அருணகிரிநாதர் பாடிய தலமாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் விளங்குகிறது.
புராண முக்கியத்துவம் :
இங்குள்ள முருகனை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நடந்தேறும். சோழ மன்னர் ஒருவர் வயல்வெளிக்குச் சென்ற போது ஒரே கணுவில் மூன்று கரும்புகள் இருப்பதைக் கண்டார். பூமியைத் தோண்டிய போது அந்த இடத்தில் சுயம்புலிங்கம் இருப்பதைக் கண்டார். அவருக்கு கோயில் எழுப்பி சுவாமிக்கு ஆதிநாதர் என்றும், அம்மனுக்கு ஆதிநாயகி என்றும் பெயர் சூட்டினார். வயல்கள் நிறைந்த ஊர் என்பதால் ‘வயலுார்’ என பெயர் வந்தது.
ஒருமுறை அருணகிரிநாதருக்கு, ‘வயலுாருக்கு வா!’ என அசரீரி கேட்டது. அதை ஏற்று இங்கு வந்த போது முருகன் காட்சி தரவில்லை. ஏமாற்றம் அடைந்ததால் ‘அசரீரி பொய்யோ?’ என உரக்கக் கத்தினார். அப்போது காட்சியளித்த முருகன் வேலினால் அருணகிரிநாதரின் நாக்கில் ‘ஓம்’ என எழுதி அருள்புரிந்தார்.
இதன் பின் இத்தலத்தில் தங்கி 18 திருப்புகழ் பாடல்களைப் பாடினார். பக்தரான வாரியார் தரிசிக்க வந்த போது அர்ச்சகருக்கு ஐம்பது காசு காணிக்கை அளித்தார். அன்றிரவு கோயில் நிர்வாகியின் கனவில், ‘என் பக்தனிடம் 50 காசு வாங்கினாயே? அதைக் கொண்டு உன்னால் கோபுரம் கட்ட முடியுமா?’ என கோபித்தார் முருகன். கோயிலில் விசாரித்த நிர்வாகிக்கு முதல்நாள் வாரியார் வந்ததும், ஐம்பது காசு காணிக்கை அளித்த விபரமும் தெரிய வந்தது. நிர்வாகி அதை மணியார்டராக வாரியாருக்கு அனுப்பி வைத்தார். இதன் பின்னர் வாரியார் இத்தலத்தில் திருப்பணி செய்து கும்பாபிேஷகத்தை நடத்தி முடித்தார்.
ஆதிநாதர் சன்னதிக்குப் பின்புறத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சியளிக்கிறார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனை தரிசித்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். கந்தசஷ்டியன்று முருகன், தெய்வானை, பங்குனி உத்திரத்தன்று முருகன், வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். இரண்டு காலையும் தரையில் ஊன்றி நிற்கும் சதுர தாண்டவ நடராஜர், அருணகிரிநாதருக்கு காட்சியளித்த ‘பொய்யா கணபதி’ சன்னதி இங்குள்ளது.






காலம்
1200 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வயலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி