காமரசவல்லி கார்கோடகஈஸ்வரர் திருக்கோயில், அரியலுார்

முகவரி :
காமரசவல்லி கார்கோடக ஈஸ்வரர் திருக்கோயில்
காமரசவல்லி,
அரியலுார் மாவட்டம் – 621715
இறைவன்:
கார்கோடக ஈஸ்வரர்
இறைவி:
பாலாம்பிகை
அறிமுகம்:
அரியலுார் மாவட்டம் திருமானுார் அருகே காமரசவல்லி என்னும் தலத்தில் உள்ள சிவனை வழிபட தம்பதியர் ஒற்றுமை உண்டாகும். நாகதோஷம் நீங்கும். காமரசவல்லிக்கு திருநல்லூர், கார்க்கொடீஸ்வரம், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுரம், காமரதிவல்லி என்ற பெயர்களும் உண்டு.
புராண முக்கியத்துவம் :
முன்பு அர்ஜூனனின் பேரனான பரீட்சித்து மன்னன் வேட்டைக்கு சென்றார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் கழுத்தில் இறந்த நாகத்தை மாலையாக அணிவித்து பரிகாசம் செய்தான். இதை அறிந்த முனிவரின் மகன் சாபமிட, கார்கோடகன் என்னும் நாகம் கடித்து பரீட்சித்து இறந்தான்.
இதனால் இவரது மகன் ஜனமேஜெயன் தன் தந்தை இறக்க காரணமான நாகர்கள் இனத்தையே அழிக்க மாபெரும் யாகம் செய்தான். அதிலிருந்து தற்காத்துக் கொள்ள இத்தல சிவனை வழிபட்டு பிரயாச்சித்தம் தேடிக்கொண்டது கார்கோடக நாகம். அன்றில் இருந்து சுவாமியின் பெயர் கார்கோடக ஈஸ்வரர். அம்மனின் பெயர் பாலாம்பிகை.
கணவரான மன்மதன் தன் கண்களுக்கு மட்டுமே தெரிய வேண்டுமென சிவனிடம் வரம் பெற்றாள் ரதி. அதனால் இத்தலத்திற்கு ரதிவரபுரம் என்னும் பெயர் ஏற்பட்டது.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோயில் சுந்தர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது. போசள மன்னன் இக்கோயிலின் கட்டுமானப் பணிகளை மேம்படுத்தி உள்ளார். விநாயகர், நந்தி, கார்க்கோடயன் இறைவனுக்கு பூசை செய்த சிற்பம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தூண்களில் அதிகமான சிற்பங்கள் காணப்படுகின்றன. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கா, சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராஜர் மண்டபம் உள்ளது. நாகர் சிற்பங்களும் காணப்படுகின்றன.
திருவிழாக்கள்:
பிரதோஷம், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், திருவாதிரை உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.








காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காமரசவல்லி
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலுார்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி